Thursday, 19 January 2012

சாபம் -சிறுகதை

      சாபம் 


                           "அப்போ அது நேச்சுரல் டெத் தானா டாக்டர்" பதினோராவது முறையாக இந்த கேள்வியை டாக்டரிடம் கேட்டான்.

" அப்கோர்ஸ் மிஸ்டர்.கார்த்திகேயன்"

"அதெப்டி டாக்டர் 28 வயசு பையனுக்கு கூட ஹார்ட் அட்டாக் வருமா"

"இந்த காலத்துல எது தான் நடக்கறதில்ல? சான்சஸ் இருக்கு! ஆனா rarest  of  the rare "

" ம்ம்ம்.. எனிவே தேங்க்ஸ் டாக்டர்" என்று சொல்லி விடைபெற்றான். சாவியை வண்டியின் வாயில் திணித்து கிளப்பினான். கார்த்தி மிகவும் சோர்வாய் அந்த வண்டியை ஓட்டினான். கணேஷின் மரணம் அவனை மிகவும் பாதித்திருந்தது. பொதுவாக அவனுக்கு பேய்.பிசாசு, அமானுஷயங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் மனம் நேற்றிரவிலிருந்து நம்ப நம்பதொடங்கியது.

                         கணேஷும் கார்த்தியும் மூன்று வருடங்களாக "Airtel customer relation centre" ல் "customer complaint section" ல் ஒன்றாக வேலை செய்கிறார்கள். மன்னிக்கவும். "செய்தார்கள்" நேற்று வரை. கணேஷின் நினைவுகள் அவனை ஆட்கொள்ளவே தன் நினைவுகளை மூன்று நாட்களுக்கு முன்னே செலுத்தினான்.

                           அந்த நாளும் எல்லா நாளை போலவே சுமுகமாகத் தான் சென்று கொண்டிருந்தது மூன்று மணி வரை. 

"என் காச அநியாமா புடுங்குநீங்கள்ள, நீங்கல்லாம் நல்லாவே இருக்கமாட்டிங்கடா" என்று கார்த்தியின் கவுண்ட்டரில் ஒருவர் கத்திக்கொண்டிருந்தார்.

                அப்போது 50  வயது மதிக்கத்தக்க ஒருவர் கணேஷின் கவுண்ட்டருக்கு வந்தார். ஆள் ஒரு மார்கமாகவே இருந்தார். கழுத்திலும் கையிலும் ஏகப்பட்ட முடிக்கயிறுகள்.

"வணக்கம் சார்! நீங்க என்ன விஷயமா இங்க வந்துருக்கீங்க சார்"

"வணக்கம் ! இது என்னோட நெம்பர்.. மூணு மாசம் முன்னாடி என்னோட போன் ஓடைஞ்சுபோச்சு.. நேத்து தான் புதுசா ஒன்னு வாங்குனேன். இந்த 
 நெம்பரத் தூக்கி அதுல போட்டா எடுக்கல தம்பி, என்னன்னு பாத்து சொல்லு" என்றார்.                           
"கண்டிப்பா சார்! வெயிட் பண்ணுங்க உங்க நெம்பரோட status  செக் பண்ணி சொல்றேன்" என்று கணினியில் அவரின் நெம்பரை தட்டினான். 
"சாரி சார்! உங்க நெம்பர் இப்போ உங்களுது இல்ல சார்" என்றவுடன் அந்த நபரின் முகம் மாறியது.
" என்ன சொல்றீங்க தம்பி, ஆறு மாசம் முன்னாடி என் பேர் ல தான் வாங்குனேன்! லைப் டயம் வேலிடிட்டி ன்னு சொன்னனுவளே"
"அதெல்லாம் சரி தான் சார் பட் நீங்க 90 நாளா இத use பண்ணாததால கம்பனி இத கேன்சல் பண்ணிட்டாங்க சார்"
" என்ன தம்பி விளையாடுறீங்களா அதுல முன்னூத்தி சொச்சம் காசு இருக்கு" என்றார் கோவமாக.
"மன்னிக்கணும் சார், 60 நாள் தொடர்ந்து நம்பர் உபயோகத்துல இல்லாம இருந்த அந்த நம்பர் தானா de-activate ஆயிடும்"
"சரி அந்த 300 ரூபாயாவது திருப்பி குடுங்க"
"சாரி அந்த மாதிரி எந்த வசதியும் இல்ல சார்"
"கஷ்ட்டப்பட்டு ஒழைச்ச காசு தம்பி, திருப்பிகுடுங்க "
"எங்களால ஏதும் பண்ணமுடியாது பெரியவரே கெளம்புங்க" என்று கை கொடுத்தான் கணேஷ். கோவமாய் படக்கென்று கணேஷின் விரலிலிருந்த மோதிரத்தை உருவினார்.  
"யோவ் வயசுல பெரியவர்னு பாத்தா என்ன வேல செய்யுற, ஒழுங்க அத திருப்பிக்கொடு" அந்த ஆள் மோதிரத்தை எதுத்து வைக்கருகில் வைத்து ஏதோ முணுமுணுத்தார். ஏதோ மந்திரம் சொல்வது போல் இருந்தது.

"இது தான் உனக்கு கடைசி நாள்" என்றபடி அந்த மோதிரத்தை கணேஷின் கையில் கொடுத்துவிட்டு கிளம்பினார்.விஷயம் பெரிதாவதை கவனித்த கார்த்தி, எழுந்து வந்து அந்த ஆளை வெளியே அனுப்பினான். வந்து கணேஷை பாத்தபோது நடுங்கி போயிருந்தான்.
"டேய் மச்சி என்ன டா ஆச்சு "
"அவன் சொன்னத கேட்டல"
"டேய் அவனே ஏதோ கடுப்புல சொல்லிட்டுபோறான் விடுடா! இதெல்லாம் என்ன புதுசா? வேலைய பாரு"என்றான் கார்த்தி. திட்டு வாங்குவேதேல்லாம் ஒன்றும் புதிதில்லை. ஆனால் இது ஏதோ விவகாரம் போலத்தெரிந்தது. அந்த ஆள் வேறு மந்திரவாதி போலவே இருந்ததால் கணேஷை முழுவதுமாக பயம் அப்பிக்கொண்டது. வேலை முடிந்ததும் இருவரும் வழக்கம் போல் போல் ஒன்றாகவே கிளம்பினார்கள்.
"மச்சி அவன் சொன்ன மாதிரியே நா செத்துருவேனா டா" என்றான் கணேஷ்.
"ச்சீய், அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா"
"இல்லடா அவன் வேற மந்திரவாதி மாதிரியே இருந்தாண்டா! நா சில கதைகள்லாம் படிச்சிருக்கேன் இந்தமாரி சாபம் கொடுத்தா பலிச்சிடும்"
"டேய் இந்த 21st century  ல போய் மாயம் மந்திரம் னு" என்று சொல்லி கணேஷை அவன் வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்க்கு கிளம்பினான்.

                      மணி நள்ளிரவு இரண்டு மணியிருக்கும் கணேஷ் நம்பரிலிருந்து கால் வந்தது , எதிர் முனையில் கணேஷின் அப்பா படபடப்புடன் பேசினார் "கணேஷ் நம்மள விட்டு போயிட்டாம்பா" கார்த்திக்கு தூக்கிவாரி போட்டது. அவனால் இதை நம்பவே முடியவில்லை. உடனே கிளம்பி சென்றான். எல்லா சடங்கும் முடிந்தது. கணேஷை செக் செய்த டாக்டரை போய் பார்த்தான்.
                   
                    "டமார்" என்ற சத்தம் கேட்டது. நினைவு நிகழ்காலத்திற்கு வந்தது. அப்போதோதன் அவனுக்கு வண்டி ஒட்டிக்கொண்டிருப்பதே நினைவுக்கு வந்தது. நினைவில்லாமல் ஒட்டி யார் மீதோ  மோதி விட்டான். இறங்கி சென்று பார்த்தபோது எதிரே சைக்கிளுடன் ஒரு பெரியவர் தரையில் கிடந்தார்.

                  "ஐயையோ சாரிங்க" என்றபடியே கைகொடுத்து அந்த பெரியவரை தூக்கினான். கார்த்தியை முறைத்தபடியே அவர் எழுந்தார், எழுப்பி நிறுத்திவிட்டு கையை பார்த்தான்.



அவன் கையில் அணிந்திருந்த மோதிரம் அந்த பெரியவர் கையில் இருந்தது. கார்த்தியின் கண்கள் கலவரமானது.